சாணார்பட்டி கோயில் விழாக்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
சாணார்பட்டி: செந்துறை பகுதி கோயில் விழாக்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி அருகே ஆண்டிய பட்டியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிந்தாமணி விநாயகர், மகாலட்சுமி அம்மன், மஹாவிஷ்ணு, சென்னப்பன், வீரபத்திரன் சுவாமிகளின் கோயில் விழா நடந்தது.
விநாயகர், நவமூர்த்திகள் ஆகிய சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை நடந்தது. சேர்வை ஆட்டத்துடன் அதிர்வேட்டு முழங்க தேர்பவனி நடந்தது.
தண்ணீர் துறையில் நீராடி, சக்தி தேங்காய் உடைத்து வீதியுலா அபிஷேகம் நடத்தி அம்மன் கோயிலை அடைந்தார். இதையடுத்து கம்பத்தில் தீபம் ஏற்றி, பக்தர்கள் தலையில் சக்தி தேங்காய் உடைக்கப்பட்டது. பெண்கள் உட்பட பலர் சாட்டையடி வாங்கி வழிபட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது. மஞ்சள் நீராட்டு மற்றும் முளைப்பாரியுடன் அம்மன் பூஞ்சோலை அடைந்தார்.
செந்துறை: நத்தம் அருகே செந்துறை குரும்பபட்டி மகாலெட்சுமி அம்மன் கோயிலும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கருப்புசுவாமி கோயிலில் கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.