ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு பரனுாரில் கோவிந்த பட்டாபிஷேகம்
திருக்கோவிலுார்: பரனுார், ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு, கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த பரனுார், ராதிகா ரமண பக்த கோலாகலன் கோவிலில்‚ ஸ்ரீஜெயந்தி பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கோவிந்த பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு‚ ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தன. இரவு, அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 20ம் தேதி காலை, ராதிகா ரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து 22ம் தேதி, தேரோட்டமும் நடக்கிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.