ஈச்சங்காடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3273 days ago
ஈச்சங்காடு:ஈச்சங்காடு, வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்போரூர் அடுத்த இள்ளலுார் ஊராட்சி, ஈச்சங்காடு கிராமத்தில், பழமை வாய்ந்த வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய, கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டது. கடந்த புதன் கிழமையன்று விநாயகர் பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகளுடன் நிறைவு பெற்றது. பின், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, 9:30 மணிக்கு மூலவர் கோபுர விமான கலசங்களில் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதையடுத்து, மூலவர் வரசித்தி விநாயகருக்கு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.