உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் கிருத்திகை விழா காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

திருத்தணியில் கிருத்திகை விழா காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, ஆவணி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆவணி மாத கிருத்திகை விழா நடந்தது. அதிகாலையில், மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.தொடர்ந்து, வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில்வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொது வழியில், இரண்டு மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். சத்திய சாட்சி கந்தன் கோவில்: இதே போல், சத்திய சாட்சி கந்தன் கோவிலில், நேற்று கிருத்திகை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சி கால பூஜையும், மாலை, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !