சிக்கலில் சக்திவேல் வாங்கிய முருகன்: சுவாமிக்கு வியர்த்ததால் பக்தர்கள் பரவசம்
நாகப்பட்டினம்: சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது, சிக்கல் சிங்காரவேலவரின் மேனியெங்கும் வியர்க்கும் அதிசயத்தை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில்தான், தன் அன்னையிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான அக்.,24ல் சிங்காரவேலவர் தேவியர்களுடன் திருத்தேரில் வீதியுலா வந்தார். இதை தொடர்ந்து, திருச்செந்துாரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, திருத்தேரிலிருந்து முருகப்பெருமான் கோவிலுக்குள் வந்து, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி அக்.,24ல் இரவு நடந்தது.
அன்னையிடம் சக்தி வேல் பெற்று, தன் சன்னிதியில் அமர்ந்த உற்சவரான முருகப்பெருமானுக்கு, மனிதர்களுக்கு வியர்ப்பது போன்று, திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னிதி சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.