சூரசம்ஹார விழா: ஈரோடு கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு: சூரசம்ஹார விழாவில், ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். ஈரோட்டில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர், கருங்கல்பாளையம் சுப்பரமணியர் கோவில், காசிபாளையம் மலைக்கோவில் உள்ளிட்ட மாநகரில் உள்ள முருகன் கோவில்களில், கடந்த, 20ல், கந்த சஷ்டி விழா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜையுடன் தொடங்கியது. நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், காலை, யாகபூஜை நடந்தது. மாலையில் சூரனை வதம் செய்து, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் புடைசூழ, வலம் வந்த முருகன், சூரனை வதம் செய்தார். மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தீயவை அழிந்தது; நல்லவை நிலை நாட்டப்பட்டது; என, கன்னத்தில் போட்டுக் கொண்டு, அரோஹரா, அரோஹரா என பக்தர்கள் கோஷமிட்டனர். விழாவை முன்னிட்டு, கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.