திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்சவம்
திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் தீர்த்த உற்ஸவம் நடந்தது.இக்கோயிலில் நவ., 24ல் துவங்கிய இத்திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தனர். நேற்று முன் தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரத்தேவர் எழுந்தருளினர். கொடியேற்றம் துவங்கி நேற்று வரை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின் புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.