சபரிமலை சன்னிதானத்தில் உச்சபூஜை: தங்க அங்கி நாளை புறப்பாடு
சபரிமலை: சபரிமலையில் சபரிமலை சன்னிதானத்தில் நேற்று உச்சபூஜைக்கு முன்னோடியாக 18 படிகளில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வழிபாடு செய்தார்.
சபரிமலையில் 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை 26ம் தேதி நடை பெறுகிறது. அன்று மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
3 நாட்கள் நடை அடைப்பு : நாளை காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 23-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும்,24-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும்தங்கும் இந்த பவனி 25-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும்.
பம்பை கணபதி கோயிலில் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை மூன்று மணிக்கு தலைச் சுமையாக சன்னிதானத்துக்குகொண்டு வரப்படும்.25ம் மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26ம் தேதி மண்டலபூஜைநேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 26 இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.31ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் நடைபெறும்.