உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடு!

பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடு!

திருவல்லிக்கேணி: நாளை நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ், மாநகராட்சி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் இணைந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நடவடிக்கையையும், மேற்கொண்டுள்ளனர். திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலத்தில், மூலவர் வேங்கடகிருஷ்ணனாகவும், உற்சவர் பார்த்தசாரதி பெருமாளாகவும், அருள் பாலிக்கின்றனர்.எல்.இ.டி., திரை: இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான, வைகுண்ட ஏகாதசி, டிச., 29ம் தேதி அன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து, அறநிலையத் துறை உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி, காவல்துறை உதவி கமிஷனர் வினோத்சாந்தாராம் ஆகியோர் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி அன்று, தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவிலுக்கு சென்று, வரும் வழித்தடங்கள் குறித்த வரைபடம், மாட வீதிகளில் வைக்கப்படும். எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட உள்ளன. மூத்த குடிமக்கள், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை, முன் கோபுர வாசல் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள், காலை, 10:00 மணிமுதல், 12:00 மணிவரை அனுமதிக்கப்படுகின்றனர்.24 கேமராக்கள்: பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில், 800 போலீசார் ஈடுபடுகின்றனர். மப்டியில், ஏராளமான போலீசார், பக்தர்களுடன் உலா வருவர். கோவிலை சுற்றி, 24 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன. அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. மாநகராட்சி, சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றின் மூலம், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 44 சிறப்பு பஸ்கள், சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து, இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.வைகுண்ட ஏகாதசி அன்று!*அதிகாலை, 2:30 மணிக்கு, 300 ரூபாய் டிக்கெட், பேட்ஜ் உள்ளவர்கள், கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்.* அதிகாலை, 2:30 மணிமுதல், 2:45 மணிவரை, உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம்.* அதிகாலை, 2:45 மணிமுதல், 4:00 மணிவரை, உற்சவர் வைர அங்கி சேவை.* அதிகாலை, 4:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு துவக்கம்.* அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வாருக்கு காட்சி தருதல்.* அதிகாலை, 4:30 மணிமுதல், 5:00 மணிவரை வேத திவ்ய பிரபந்தம் துவங்குதல்.* காலை, 5:10 மணிமுதல், 8:45 மணிவரை பக்தி உலா, புண்ணிய கோடி விமானத்தில், வைர அங்கியுடன் உற்சவர் சேவை சாதித்தல்.* காலை, 6:00 மணிமுதல் இரவு, 12:00 மணிவரை, பக்தர்கள் சிறப்பு கட்டண தரிசனம், 100 ரூபாயில் பின்புற வாசல் வழியாகவும், தர்ம தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகவும் செல்லலாம்.* இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம், நள்ளிரவு, 12:00 மணிக்கு நம்மாழ்வாருடன் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !