ஆறுமுகனின் அருள் பெற்ற அடியவர்கள்
ஆறுமுகனான முருகனருள் பெற்றவர்கள் அவ்வையார், அகத்தியர், அருணகிரிநாதர் என, எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகனின் திருவருளையும் தந்தருள்கின்றனர்.
அகத்தியர்: முருகன் அருள் பெற்ற அடியார்களில்முதன்மையானவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகனிடம் பெற்று, பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக, திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில், முருகனிடம் உபதேசம் பெற்று, அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாக கூறுவர்.
நக்கீரர்: கடைச்சங்கப் புலவராக, மதுரையில் இருந்து தமிழ் வளர்த்த புலவர் நக்கீரர். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில், பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது, முருகனே காப்பாற்றி அருள்புரிந்தார். முருகனின் ஆறுபடை வீடுகளை சிறப்பித்து போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.
அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில், அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகன் இவரிடம், பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவை.
குமரகுருபரர்: திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், 5 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்று, கந்தர் கலிவெண்பாவை பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகன் மீது இவர் பாடிய முத்துக்குமாரசு வாமி பிள்ளைத்தமிழ் புகழ் பெற்றது. காசியில் மடம் ஒன்றை நிறுவினார்.
தேவராய சுவாமிகள்: பட்டி, தொட்டிகளில் எல்லாம், முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டி கவசத்தைப் பாடியவர் தேவராய சுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.
ராமலிங்க வள்ளலார்: அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என, கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும் போது கண்ணாடியின் முன் தியானம் செய்த போது, மயில்வாகனத்தில் முருகன் இவருக்கு காட்சியளித்தார். கந்த கோட்டத்து முருகனிடம் இவர் கேட்கும் வரங்கள், நம் அனைவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.
பாம்பன் சுவாமிகள்: குமரகுருதாச சுவாமிகள் என்னும் இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் எனப்பட்டார். முருகன் மீது, 6,666 பாடல்கள் பாடினார்.முருகனருளால் அற்புதம் நிகழ்த்திய இவர், சமீப காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாக திகழ்கிறது. தமிழ் உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாக கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சாமிர்த வண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தவர் இவர்.