3,200 அடி உயர கோவிலில் சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED :2849 days ago
ஓசூர்: கெலமங்கலம் அருகே, 3,200 அடி உயர மலைக்கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த அஞ்செட்டி துர்க்கம் பகுதியில் உள்ள, 3,200 அடி உயர மலை உச்சியில், இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழன் மூலம், மாதேஸ்வரசுவாமி கோவில் கட்டப்பட்டது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலில், 10 பேர் அமர்ந்து கூட சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இதையடுத்து போடிச்சிப்பள்ளி பஞ்., பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, கோவிலை சீரமைப்பு செய்தனர். இந்நிலையில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று, காலை முதல், மாலை வரை, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.