காவல்காரன்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2821 days ago
குளித்தலை: காவல்காரன்பட்டி காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன்பட்டியில், விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், மகா காளியம்மன், பகவதி அம்மன், பாம்பலம்மன், கருப்பசாமி முதலான சுவாமிகளுக்கு தனித்தனியே கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக, குளித்தலை காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் முதல் நாள் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன. பின், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் யாக சாலை பூஜை செய்து, நேற்று காலை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.