அலங்காநல்லூர் கோவிலூரில் சிதிலமடைந்த கோயில்
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட நாராயண பெருமாள் மற்றும் கம்பத்தடியான் கருப்புசாமி கோயிலை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
இக்கோயில் அழகான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. வாசலின் இரு தூண்களில் ஆஞ்சநேயர் மணிகட்டிய சிலையும், அதன் எதிரே கருடாழ்வார் சிலையும் இருப்பது சிறப்பு.
கல்மண்டபத்தில் மீன் உருவ சின்னம் இருப்பதால் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
400 ஆண்டுகளுக்கு முன் கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது, அலங்காநல்லூரில் அலங்காரம் முடிந்து இங்கு எழுந்தருளி இருக்கலாம் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.
பக்தர்கள் முக்கிய நாட்களில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். புராதன பெருமைமிக்க இந்த கற்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இக்கோயிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.