உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன்  துவங்கியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புடையதும்,தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவமந்திரத்தை உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரிநாதரால் திருப்புகலிலும் பாடல் பெற்ற தலம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா இன்று காலை 9 மணிக்கு கொடிமரம் அருகே வள்ளி தெய்வானையுடன் சண்முகர்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை சுவாமி  வீதிவுலா நடைபெறுகிறது. இதையடுத்து விழாவின் முக்கிய நாளான மே1ம் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !