உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

சின்னமனூர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

சின்னமனுார், சின்னமனுாரில் நடந்த பூலாநந்தீஸ்வரர்-சிவகாமியம்மன் திருக்கல்யாணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.

சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நடந்த பூலாநந்தீஸ்வரர்-சிவகாமியம்மன் திருக்கல்யாணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அர்ச்சகர் மகாராஜா பட்டர் அம்மனுக்கு மங்கள நாண் அணிவித்தார். பெண்கள் புது மஞ்சள் கயிறு அணிந்து, தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முன்னதாக தெய்வீக பேரவை சார்பில் தேவாரம், திருவாசகம் ஓதுதல் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கமலா, கோயில் நிர்வாக அலுவலர் அருட்செல்வன், வர்த்தக பிரமுகர் வஜ்ரவேல், காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், அ.தி.மு.க., நகர துணைச்செயலாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உபயதாரர்கள் சார்பில் ஆயிரத்து 500 மங்கள பைகள் , ரூ. 100 மொய் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற 2 ஆயிரம் பேருக்கு சமூக ஆர்வலர் மது சார்பில் குளிர்பானம் வழங்கப்பட்டது. உபயதாரர்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று தேரோட்டம்: காலை 11:00 மணிக்கு மேல் சுவாமி-அம்மன் தேரில் எழுந்தருள்வர். மாலை 5:00 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். கண்ணாடி கடை முக்கில் நிறுத்தப்படும் தேர், நாளை மாலை நிலைக்கு அழைத்து வரப்படும். பெரியகுளம்: ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், மீனாட்சி சோமசுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மொய்விருந்து வாங்கப்பட்டது. மஞ்சள் தாலி, வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார்.

* மீனாட்சியம்மன் கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
* வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயில், கைலாசபட்டி கைலா சநாதர் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.

ஆண்டிபட்டி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இக்கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மண்டகப்படி நடந்தது. நேற்று நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் , யாகசாலை பூஜைகள், அதனை தொடர்ந்து இந்து சமய ஆகம விதிப்படி வேத மந்திரங்கள் முழங்க, கெட்டி மேளத்துடன் மீனாட்சிக்கு மாங்கல்யம் அணிவித்த நிகழ்ச்சி நடந்தது. விரதம் இருந்த சுமங்கலி பெண்கள் பலர் பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தில் விருந்து வைக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமிக்கு மொய் எழுதினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் அருள்செல்வன் தலைமையில் விழாக்குழுவினர், பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் செய்தனர்.

உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அதிகாலையில் விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம், மாங்கல்ய பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் மாங்கல்ய தாரணம், திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை திருக்காளாத்தீஸ்வரர் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

தேனி: பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. சீதா கல்யாணம்: கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலில் ராமநவமி திருவிழா ஏப். 22 ல் துவங்கியது. மே 5 வரை நடக்கிறது. தினமும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். ராம ஜெனனம், ராம உபநயனம், அகல்யா சாபவிமோசனம், சீதையின் சுயம்வரம், சீதையின் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சீதா கல்யாணம் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !