கொசவபட்டி உத்திரியமாதா ஆலய விண்ணேற்பு விழா
ADDED :2745 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கொசவபட்டி உத்திரியமாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் விண்ணேற்பு விழா நடந்தது. கடந்த மே 6 அன்று இரவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் இரவில் ஒயிலாட்டம், கோலாட்டம், இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மே 7 மற்றும் 8 ஆம் நாட்களில் அலங்கார மின்ரத பவனி நடந்தது. நேற்று முன்தினம் இரவு மன்றாட்டுகள் வாசிக்கப்பட்டு, தப்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் வான வேடிக்கை முழங்க இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏசுநாதர் வானலோகத்திற்கு எழுந்தருளிய காட்சி காண்பிக்கப்பட்டது. நேற்று பகல் தேர்பவனி நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில் மணியம் டேவிட் இருதயசாமி, நாட்டாண்மை குழந்தைராஜ், மேனேஜர் அற்புதம், பொருளாளர் அமலதாஸ் உள்ளிட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.