காஞ்சிப்பெரியவரின் 125வது ஜெயந்தி: எங்கும் ஒலிக்கட்டும் தெய்வத்தின் குரல்!
 எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சிப் பெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை என்பது இவரது கோட்பாடு. பெரும்பாலும் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் தங்கினார். நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று மக்களை சந்தித்தார்.
பெரியவரும், காந்திஜியும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பு கொண்டிருந்தனர். 1927 அக்.15ல் கேரள மாநிலம் பாலக்காட்டின் அருகிலுள்ள நெல்லிசேரியில் பெரியவரை சந்தித்தார் காந்திஜி. ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்த விபரம் அப்போது வெளியாகவில்லை.ஆண்டுகள் பல கடந்தன. காந்திஜி 1948 ல் கொல்லப்பட்டார். 1968ல் சென்னை பல்கலைக்கழகம் காந்தியச் சிந்தனைகளின் இன்றைய தேவை என்பது குறித்து கருத்தரங்கம் நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட மலரில் பெரியவர், யாரேனும் தன்னைக் கொல்ல வந்தாலும், கொல்பவர் மீதும் அன்புசெலுத்தும் மனம் தனக்கு வேண்டும் என்று காந்திஜி நெல்லிசேரி சந்திப்பில் வேண்டியதாக குறிப்பிட்டிருந்தார். சமகாலத்தில் வாழ்ந்த துறவியர் மீது அவர் மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு பல சம்பவம் உண்டு. பால்பிரண்டன் என்னும் வெளிநாட்டவர், தனக்கு உபதேசம் அளிக்கும்படி எழுத்தாளர் கா.சி.வெங்கடரமணி மூலம் பெரியவரை வேண்டினார். வெளிநாட்டவருக்கு உபதேசிக்க மடத்து விதிகள் அனுமதிக்காது என்பதால் ரமணரிடம் செல்லும்படி பெரியவர் வழிகாட்டினார்.
யோகி ராம்சுரத் குமாரின் ராமபக்தி பற்றி அறிந்த பெரியவர், திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிபுரம் வரவழைத்தார். மவுன மொழியில் ஒருவருக்கொருவர் பேசிய பின் ராம்சுரத்குமாரை திருவண்ணாமலைக்கே அனுப்பினார் பெரியவர். இதுகுறித்து யோகி, இருபத்து நான்கு மணி நேரமும் ராம நாமம் ஒலிக்கும் கோவிந்தபுரத்திற்கு செல்லலாமே என பெரியவர் கேட்டதாகவும், திருவண்ணாமலையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்று தான் மறுக்கவே, நல்லது....திருவண்ணாமலையில் இருந்து விடுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார். கிறிஸ்தவர், முஸ்லிம் மதத்தினரும் பெரியவரை மதித்தனர். மடத்திற்கு அருகிலுள்ள மசூதியில் ஒலிபெருக்கியின் ஒலியைக் குறைக்கச் சொல்லலாமா என சீடர்கள் கேட்டபோது,இறைவனை நினைவுபடுத்துவதால், அந்த ஒலிபெருக்கி இருக்கட்டும் என தெரிவித்தார் பெரியவர். நீதிபதி மு.மு. இஸ்மாயில் போன்ற தமிழ் அறிஞர்கள் பெரியவர் மீது மதிப்பு கொண்டிருந்தனர். நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறிய கவிஞர் கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம்என்ற நுாலை எழுதபெரியவரே காரணமாக இருந்தார்.
பொதுவுடைமை எழுத்தாளர் ஜெயகாந்தன் மகாசுவாமிகளின் கண்களில் நான் கடவுளைக் கண்டேன்! என வியந்தார். சிறுகதை, நாவல் வரலாற்றை எழுதிய சிட்டி பி.ஜி. சுந்தரராஜன், பெரியவர் குறித்து ஆங்கில நுால் எழுதியுள்ளார். மெரினா என்ற பெயரில் நாடகங்களும், ஸ்ரீதர் என்ற பெயரில் கார்ட்டூன்களும் படைத்த ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் பெரியவரின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியவர் எழுதிய மைத்ரீம் பஜதாம் என்னும் பாடலை இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி ஐக்கியநாடுகள் சபையில் பாடினார். உலக சமாதானத்தை வலியுறுத்தும் பாடல் இது. தமிழ்ப்பற்று மிக்க பெரியவர், அவ்வையாரை விடத் தமிழ்நாட்டுக்கு உபகாரம் செய்தவர் யாருமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் ஒழுக்கமும் பக்தியும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவ்வையாரே. நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே அவ்வையின் ஆத்திசூடி தானே முதலில்வருகிறது! என்று குறிப்பிட்டார். வேதம், உபநிடதம் மட்டும் இல்லாமல் வடமொழி இலக்கியத்திலும் புலமை மிக்கவராக இருந்தார். நீலகண்ட தீட்சிதரின் சிவ லீலார்ணவம், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம், காளிதாசரின் ரகுவம்சம், சாகுந்தலம் போன்ற காவியங்களில்மேற்கோள் காட்டியும், இலக்கிய நயம் குறித்தும் பலமுறை பேசியிருக்கிறார்.
பணக்காரர், ஏழை என்ற பேதமின்றி எல்லோருக்கும் ஆசி வழங்கினார். அவரைச் சந்திக்க பிரதமர் இந்திரா முதல் சராசரி மனிதர்கள் வரை அனைவரும் வந்தனர்.ஒருமுறை பார்வையற்ற மாணவர்கள் மடத்திற்கு வந்த போது, மவுன விரதம் இருந்த போதும், அதைக் கைவிட்டார். பார்வையற்றவர்களுக்கு குரல் தானே முக்கியம். அவர்களை மகிழ்விக்க பேசுவதை விடவும், விரதம் முக்கியமல்ல என விளக்கம் அளித்தார். வரதட்சணை பழக்கத்தை எதிர்த்த அவர், வரதட்சணை வாங்கும் திருமணங்களில் பரமாச்சாரியாரின் அருளாசியோடு என்று ஏன் அச்சிடுகிறீர்கள்? என்று கடிந்தார். பட்டுப்புழுக்களைக் கொன்று நெய்யும் பட்டுத் துணியை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். சைவ, வைணவ பேதம் இல்லாமல் நாராயண நாராயண! என்று திருமால் நாமம் சொல்லி பேச்சை நிறைவு செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆண்டாளின் திருப்பாவையின் புகழ் பரப்பியதில் பெரியவருக்கு பங்குண்டு. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்வை பேச்சில் அடிக்கடி குறிப்பிடுவார். ஜகத்குரு என்று பக்தர்கள் போற்றிய போது, உலகம் முழுவதற்கும் இவர் எப்படி குருவாக முடியும் என்று கேள்வி எழுப்பினர் சிலர்.உலகத்தையே நான் குருவாகக் கொண்டவன், காணும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்கிறேன் என்பதாகவே ஜகத்குரு என்ற சொற்றொடரை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று அடக்கமுடன் தெரிவித்தார் பெரியவர்.
நுாறாண்டு வாழ்ந்த அவர் ஆன்மரூபமாக இன்றும் வாழ்கிறார்.வியாசருக்கு உதவியாக, மகாகணபதி தந்தத்தை ஒடித்து எழுத மகாபாரதம் உருவானது. அது போல பெரியவரின் உபதேசங்களை இன்னொரு கணபதி (ரா. கணபதி) பேனாவால் தொகுத்து நுாலாக்கினார். அதுவே தெய்வத்தின் குரல் எனப்படுகிறது. நடமாடும் தெய்வமான காஞ்சிப்பெரியவரின் தெய்வக்குரல் எங்கும் ஒலிக்கட்டும். அதன் மூலம் உலகமே உய்யட்டும். -திருப்பூர் கிருஷ்ணன்-