திருவள்ளூர் கன்யகா பரமேஸ்வரிக்கு நாணய அலங்காரம்
ADDED :2656 days ago
திருவள்ளூர்: சாரதா நவராத்திரியை முன்னிட்டு, கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு, நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருவள்ளூர், கொண்டமாபுரம், கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 10ம் தேதி துவங்கியது. தினமும், அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம், ஊஞ்சல் சேவை, தீபாராதனை அர்ச்சனை நடந்து வருகிறது. கடந்த, 14ம் தேதி, மூலவருக்கு மஞ்சள் காப்பு சார்த்தப்பட்டு குங்குமத்தால் புடவை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம், மூலவருக்கு, குங்குமம் மற்றும் நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இன்று, காலை, 8:00 மணிக்கு, குண்டப்பிரவேசம், மதியம், 12.30 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும், வைஸ்ய சமாராதனை, இரவு, 7:00 மணிக்கு, அம்மன் பார்வேட்டை நடைபெறுகிறது.