மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :2679 days ago
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 14ல்) திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது.
ஆறாம் நாள், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது. கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 14ல்) காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருகல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது.அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதர சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் செலுத்திய மொய் பணமாக, 60,796 ரூபாய் வசூல் ஆனது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.