உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், இன்று இரவு, ஆருத்ரா அபிஷேகமும், நாளை அதிகாலை, கோபுரதரிசனமும் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம், வெகு விமரிசையாக நடக்கிறது. நடப்பாண்டில், ஜன., 1ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், மறுநாள் காலை, கோபுர தரிசனமும் நடந்தது. இந்தாண்டிலேயே இரண்டாவது முறையாக, இன்று இரவு, 9:00 மணிக்கு, மூலவருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது.

நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால், அதிகாலை, 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான், கோவில் முன் வந்து, அருள்பாலிப்பார். அப்போது, கோபுர தரிசனம் நடைபெறும். மதியம் 1:00 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் காத்திருந்து, மூலவரை வழிபடுவர். இதற்காக, கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படும், வண்ண விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !