உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடும் விழா

மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடும் விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை செய்து "திருக்கம்பம் நடும் விழா இன்று நடக்கிறது. பொள்ளாச்சி, மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்., 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. விழாவையொட்டி, கோவில் முன் "திருகம்பம் இன்று நடப்படுகிறது. பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவிலில் இருந்து, பூஜிக்கப்பட்ட "கம்பம் தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்படும். கம்பத்தில், நவதானியங்கள் கட்டப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இரவு 10.00 மணிக்கு கம்பம் நடப்படவுள்ளது. கோவில் முன் வைக்கப்படும் திருக்கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வழக்கம். வரும் 28ம் தேதி கம்பத்தில் கோவில் சார்பில் பூவோடு வைக்கப்படுகிறது. வரும் 2ம் தேதி முதல் பொதுமக்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களும் பூவோடு எடுத்து அம்மனை நேர்த்திகடனை செலுத்துகின்றனர். அன்று இரவு 11.00 மணிக்கு கிராம சாந்தியும், வரும் 3ம் தேதி விழாவுக்கான கொடிகட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 7ம் தேதி காலை 6.00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு படைத்து அம்மனை வழிபாடு செய்கின்றனர். காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் அம்மன், முக்கிய பகுதிகளின் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று முதல் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் தரிசனத்திற்காக தேர் நிறுத்தங்களில் தேர் நிறுத்தப்பட்டு, வரும் 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு மீண்டும் தேர், கோவிலில் வந்த நிலை அடைகிறது. பின், இரவு 10.00 மணிக்கு பாரிவேட்டை மற்றும் தெப்பத்தேர் வைபவம் ஆகியவை நடக்கிறது. வரும் 10ம் தேதி மஞ்சள் நீராடுதல், 12ம் தேதி மகா அபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் நாகையா, பரம்பரை அறங்காவலர் மகாலிங்கம் உட்பட பலர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !