மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்!
ராமேஸ்வரம்:மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நடை திறந்து வைக்கப்பட்டதால், சிவராத்திரி விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நேற்று மதியம் 1.30க்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினர். மாலையில் நான்கு ரத வீதியில் உலா வந்தனர்.நேற்று மதியம் சுவாமி அம்பாள் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளியதை தொடர்ந்து, நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு கோயில் நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தன.