வீரபாண்டி காளியம்மன் கோவில் மாசி விழா
வீரபாண்டி: காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவையொட்டி, நேற்று (மார்ச்., 4ல்) நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த, 27ல் பூச்சாட்டு தலுடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விதவிதமான அலங்காரங்களில், அம்மன் அருள்பாலித்தார். நேற்று (மார்ச்., 4ல்) காலை, 6:00 மணிக்கு திருமணிமுத்தாற்று கரையில் இருந்து துவங்கிய தீர்த்தக்குட ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்டவர்கள் புனித நீரை குடங்களில் ஏந்தியபடி கோவிலை வந்தடைந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து பச்சை மாவு, கூழ் படைத்தல் நிகழ்ச்சி, மாலையில் உருளுதண்டம், அக்னி கரக ஊர்வலம் நடந்தது. இன்று (மார்ச்., 5ல்) காலை, பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தலும், இரவு சத்தாபரண ஊர்வலமும் நடக்கிறது. வரும், 12ல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.