திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் தெப்ப உற்சவம்
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாசி மாதம், ஏழு நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம், இன்று துவங்குகிறது. திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், கங்கையை விட புனிதமான, இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்களைக் கொண்டு, கைரவீணி என்ற தீர்த்தக்குளம், தனிச்சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும், மாசி மாதம் தெப்ப உற்சவம், ஏழு நாட்கள் விமர்சையாக நடத்தப்படுகிறது. கைரவீணி குளத்தில், முதல் மூன்று நாட்கள், பார்த்தசாரதி சுவாமியும், அடுத்த நான்கு நாட்கள் முறையே நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரவரதராஜசுவாமி ஆகியோர், தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிப்பர். இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், இன்று துவங்குகிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.