அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம்: வரும் 10ல் துவக்கம்
ADDED :2415 days ago
தி.மலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும், 10ல், சித்தரை வசந்த உற்சவ விழா தொடங்குகிறது.
இதை முன்னிட்டு வரும் 9ல், மாலை 4:30 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் கன்னியா லக்னத்தில் கோவிலில் கொடியேற்றம் நடக்கும். 10ல், கோவில் வளாகத்தில் காலை உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இரவு நேரங்களில், சுவாமி, அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உள்ள தல விருட்சமான மகிழ மரத்தை தினசரி பத்துமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். நிறைவு விழா, 19ல், அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு கோவில் வளாகத்தில் மன்மத தகனமும் நடக்கும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.