குளித்தலை கம்பம் ஊர்வலத்துடன் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED :2348 days ago
குளித்தலை: குளித்தலை மாரியம்மன்கோவில் திருவிழா காப்பு கட்டுதலுக்கு, அலங்கார வாகனத்தில் கம்பம் எடுத்து வரப்பட்டது.
குளித்தலை முத்துபால சமுத்திரம் மாரியம்மன்கோவில் திருவிழா, நேற்று (மே., 5ல்) துவங்கியது. இதற்காக, மலையப்பன் நகரில் உள்ள மல்லாண்டார் கோவிலில் இருந்து, அலங்காரம் செய்யப்பட்ட வண்டியில், கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. குளித்தலை தெப்பக்குளம், பஜனை மடம், அக்ரஹாரம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வழியாக, மேளதாளத்துடன், மாரியம்மன் கோவிலுக்கு கம்பம் கொண்டு வரப்பட்டது.
அங்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கம்பம் வழங்குதல் நடந்தது. திருவிழா, 15 நாட்களுக்கு நடக்கிறது. தினமும் பால் குடம், தீர்த்தகுடம் ஊர்வலம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துதல், தீ மிதித்தல், தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.