திருத்தணி கோவில் கிருத்திகை விழா
ADDED :2308 days ago
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆனி மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வந்ததால், பொது வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் வழிபட்டனர்.