உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைதிப் பூக்கள் மலரட்டும்: இன்று தெலுங்கு புத்தாண்டு!

அமைதிப் பூக்கள் மலரட்டும்: இன்று தெலுங்கு புத்தாண்டு!

"யுகாதி என்னும் தெலுங்கு புத்தாண்டு இன்று பிறக்கிறது. சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது. பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்டது. அப்போது, யுகாதி கொண்டாட்ட நாளில் சிறு மாற்றம் ஏற்பட்டது. இந்நாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும். ஏழுமலையான் பவனி வருவார். "யுகாதி என்றால் "புதிய பிறப்பு . புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று தெலுங்கு மக்கள் விரும்புகின்றனர். இதற்காக, யுகாதியன்று அமைதியை வலியுறுத்தும் கதையொன்றைச் சொல்வார்கள். ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமத்தில் நடந்த வேதாந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு ஏராளமான ரிஷிகள் வந்திருந்தனர். ராமனும், லட்சுமணனும் மரவுரி தரித்து, ரிஷிகளின் ஊடே அமர்ந்திருந்தனர். பார்ப்பதற்கு ரிஷிகளைப் போலவே காணப்பட்டனர். ரிஷிபத்தினிகள் அதற்கு முன்பு ராமனைப் பார்த்ததில்லை. அவர்கள் தங்கள் அருகில் இருந்த சீதையிடம், "" அங்கே இருப்பவர்களில் உன் கணவர் யார்? என்றனர். சீதை அமைதியாக இருந்தாள். ரிஷிபத்தினிகள் விடவில்லை.""சொல் சீதா! சிவப்பாய் இருக்கிறாரே அவரா! பச்சை நிற துண்டு அணிந்துள்ளாரே அவரா! கருப்பாய் உயரமாய் இருக்கிறாரே அவரா! என்று மாறி மாறி யார் யாரையோ சுட்டிக்காட்டி கேட்டனர். அவள் "இல்லை..இல்லை என தலையாட்டியபடியே அமைதியாக இருந்தாள். ராமன் பேச ஆரம்பித்ததும், ""இப்போதாவது சொல் சீதா! இப்போது பேசிக்கொண்டிருக்கிறாரே அவரா! என்றனர் ரிஷிபத்தினிகள். அப்போதும் அவள் "ஆம் என்று சொல்லாமல், "இல்லை என்று தலையாட்டியதை நிறுத்திவிட்டாள். அதைக்கொண்டு தான், பேசிக்கொண்டிருப்பது ராமர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். சிறிய விஷயங்களில் கூட, அமைதியைக் கடைபிடிக்கவேண்டும் என்ற உயரிய அறிவுரை, இந்தக்கதை மூலம் தெலுங்கு மக்களுக்கு போதிக்கப்படுகிறது. அவர்கள் மட்டுமல்ல... ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உயரிய தத்துவம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !