திருக்கழுக்குன்றம் லட்சுமி தீர்த்த குளம் தூய்மை; தன்னார்வலர்கள் முழு ஈடுபாடு
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், லட்சுமி தீர்த்தக் குளத்தை, தன்னார்வலர்கள் துாய்மைப்படுத்துகின்றனர். திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் அருகே, லட்சுமி தீர்த்தக் குளம் உள்ளது. முட்செடிகள், மரங்கள் வளர்ந்தும், குப்பைக் கழிவுகள் நிறைந்தும், படித்துறைகள் இருப்பதும்கூட தெரியாத அளவிற்கு, குளம் துார்ந்துக் காணப்பட்டது.
இதையடுத்து, லட்சுமி தீர்த்த அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, குளத்தைத் துாய்மைப்படுத்த முடிவு செய்தனர்.பின், 30 ஆயிரம் ரூபாய் சேகரித்து, முதற்கட்டமாக, புதர்மண்டி கிடந்த முள்மரம், குப்பைக் கழிவு களை மட்டும் அகற்றி வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:நீர்வள ஆதாரத்தைப் பாதுகாப்பது சம்பந்தமாக, ’தினமலர்’ நாளிதழில் வரும் செய்தி படித்ததும், எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
இதனால், 15 நாட்களாக, குளத்தை துாய்மைப்படுத்துகிறோம்.இருப்பினும், குளத்தை முழு தாக துார் வாரவும், சீரமைக்கவும், குறைந்தது, 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மற்ற தன்னார்வலர்கள், எங்களுடன் இணைந்து, குளத்தை துார் வாரும் பணியை மேற்கொண்டால், உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.