நாகாத்தம்மன் கோவில் ஆடி மாத திருவிழா
கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை, நாகாத்தம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டு ஆடி மாத திருவிழா, நடைபெற்றது.
கவரைப்பேட்டை, உத்திரக்குளம் பகுதியில் அமைந்துள்ள, நாகாத்தம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டு, ஆடி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. துவக்க நிகழ்வாக, கவரைப்பேட்டை, புத்தியம்மன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டது. கரகத்தை பின் தொடர்ந்தபடி ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.அம்மன் கரகம் சென்றடைந்ததும், நாகாத்தம்மன் மற்றும் புற்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார, ஆராதனை நடைபெற்றன. அதை தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் ஊற்றல், ஊர் கூடி பொங்கல் வைத்தல், அலகு போடுதல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று, நாகாத்தம்மனை தரிசித்து சென்றனர்.