ஆடி அமாவாசை விழா சதுரகிரியில் குவியும் பக்தர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துஉள்ளது.
நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதிகாலை 5:00 மணிக்கு தாணிப்பாறை பாதை திறக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை என்பதால் மாலை 4:00 மணி வரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்தில் முடிக்காணிக்கை செலுத்தி கோயிலுக்குச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை பகுதியில் உள்ள தோப்புகளில் தங்கியுள்ளனர்.இன்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மலை அடிவார பகுதியில் உள்ள அன்னதான மடங்களில் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.