நாமக்கல் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நாமக்கல்: ஆடி அமாவாசையையொட்டி, காவிரி கரையோர பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
ஆடி, புரட்டாசி, தை மாதத்தில் வரும் அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாள்களில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு அர்ச்சகர்கள் மூலம் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப்பர். நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசை என்பதால், கடற்கரை யோரங்களிலும், ஆற்றங்கரையோரங்களிலும் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர், பள்ளிபாளையம், குமாரபாளை யம், ப.வேலூர் காவிரி கரையோரங்களில், காலை, 6:00 முதல், மதியம், 12:00 மணிவரை மக்கள் தர்ப்பணம் கொடுப்பதை மேற்கொண்டனர்.
காவிரி ஆற்றில் நீர் இல்லாதபோதும், ஓடும் சிறிதளவு நீரில் குளித்து வாழை இலையில், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி, காய்கள், கீரைகள் வைத்து தங்களது குடும்பத்தில் இறந்து போன முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரிசி மாவில் உருண்டை பிடித்து, காவிரி ஆற்றில் விட்டு தங்கள் கடமையை செய்தனர். ஆற்றங்கரையோர சிவன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.