திருப்புல்லாணி சரணாகதி தலத்தில் பங்குனி விழா கொடியேற்றம்!
திருப்புல்லாணி :திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் கோயில், 108 வைணவ தலங்களில் 44வது. தலம். ராவணனின் தம்பி விபீஷணர் ராமரிடம் சரணடைந்த தலம் என்பதால், இதற்கு "சரணாகதி தலம் என்ற பெயரும் உண்டு. வேறு எந்த பெருமாள் கோயிலிலும் இரண்டு கொடிமரம் கிடையாது, இந்த கோயிலில் இருப்பது தனிச்சிறப்பு. பங்குனி பிரமோத்ஸவத்தின்போது, சேதுக்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஆடுவது சிறப்பு வாய்ந்தது. அவருடன் சேர்ந்து நீராடினால் நீங்காத பாவம், பிணி நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலின் பங்குனி பிரமோத்ஸவ கொடியேற்ற விழா, நேற்று காரைக்குடி ராமன் பட்டாச்சார்யார் தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல அபிஷேகங்கள் நடந்தது. ஏப்.,6ம் தேதி காலை 11 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், விசாரணைதாரர் கண்ணன் செய்து வருகின்றனர்.