உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிசல் மூலம் ஆற்றை கடந்த பண்ணாரி மாரியம்மன்: பக்தர்கள் பரவசம்!

பரிசல் மூலம் ஆற்றை கடந்த பண்ணாரி மாரியம்மன்: பக்தர்கள் பரவசம்!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன், வீதி உலா நிகழ்ச்சியின்போது, தொட்டம்பாளையத்தில் இருந்து பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து வந்தார். ஆற்றின் கரைநெடுகிலும் நின்றிருந்த பக்தர்கள், "மாரியம்மா, மாரியம்மா என, கோஷமிட்டு வழியனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவில், பங்குனி குண்டம் திருவிழா, பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மார்ச் 27ம் தேதி இரவு பண்ணாரி கோவிலில் இருந்து, பண்ணாரி மாரியம்மன் வெள்ளிக்கவசத்தில், சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா புறப்பட்டார். சிக்கரசம்பாளையத்தில் துவங்கிய வீதி உலாவில், நேற்று முன்தினம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் வழியாக, இரவு தொட்டம்பாளையம் சென்றார். அங்குள்ள வேணுகோபால் ஸ்வாமி கோவிலில், இரவு அம்மன் தங்கினார். நேற்று மதியம், தொட்டம்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் மறுகரையில் உள்ள வெள்ளியம்பாளையம் புதூர் கிராமத்துக்கு பரிசல் மூலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரு பக்கத்திலும் உள்ள கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று கை கூப்பி, "மாரியம்மா, மாரியம்மா என விண்ணை முட்டுமளவு கோஷமிட்டனர். அலங்கரிக்கப்பட்ட பரிசலில் அம்மனின் சப்பரம் ஏற்றப்பட்டு, தொட்டம்பாளையத்தில் இருந்து புறப்பட்டார். அக்கிராம மக்கள் ஆற்றங்கரையில் திரளாகக் கூடி நின்று, அம்மனை வழியனுப்பி வைத்தனர். நேற்று மாலை வெள்ளியம்பாளையம்புதூரில் வீதி உலா முடிந்து, இரவு அக்கரை தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில், அம்மன் தங்கினார். இன்று உத்தண்டியூர், அய்யன்சாலை, ரமாபுரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர்நகர் வழியாக இரவு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோவிலுக்கு அம்மன் வருகிறார். இவ்வாறு, பல்வேறு கிராமங்களுக்கு வீதி உலா செல்லும் மாரியம்மன், ஏப்., 3ம் தேதி மீண்டும் கோவிலை வந்தடைகிறார். ஏப்., 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, குண்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !