ராசிபுரத்தில், ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2393 days ago
ராசிபுரம்: ராசிபுரத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் வட்டார மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றங்கள் சார்பில், மழை வேண்டி யும், விவசாயம் செழிக்கவும் தீர்த்தக்குடம், கஞ்சி கலயம் ஏந்தி திரளான பெண்கள் செவ்வாடை அணிந்து ஊர்வலம் வந்தனர். முன்னதாக, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி, தீர்த்தக்குடம், கஞ்சி கலயம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். பின்னர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆதி பராசக்தி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, அன்னதானம், கஞ்சி வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.