உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கந்தசஷ்டி விரதம் வழிபாடு: வாழைத்தண்டு நைவேத்யத்துடன்

பழநியில் கந்தசஷ்டி விரதம் வழிபாடு: வாழைத்தண்டு நைவேத்யத்துடன்

பழநி, :பழநியில் வாழைத்தண்டு, காய்கறி, பழங்களுடன் தயிர் கலந்த கூட்டு நைவேத்யத்துடன் பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் முடித்தனர். கந்தசஷ்டி விழாவிற்காக நவ.,8 முதல் காப்புக்கட்டி 6 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி  கோயில்களில் விரதத்தை நிறைவு செய்தனர்.

இதற்காக பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மலைக்கோயிலில் தண்டாயுதசுவாமி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு  நைவேத்யம் செய்தனர்.பின்னர் நைவேத்யத்தை உண்டு பக்தர்கள் விரதம் முடித்தனர். மற்ற பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கினர். கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து வந்த பக்தர்களும் இதில் பங்கேற்றனர். கோவை சூளுர் பக்தர் பழனிச்சாமி கூறுகை யில், “  கந்தபுராணம், கந்தசஷ்டி கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று நைவேத்யம் தயார் செய்து விரதத்தை நிறைவு செய்வது வழக்கம். அதன்படி தயாரித்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து சஷ்டி கொண்டாடுகிறோம். திருக்கல்யாணம் முடிந்தவுடன் கையில் கட்டிய காப்பைக்  கழற்றி, தலை வாழையில் உணவருந்தி விரதம் முடிக்கிறோம்” என்றார்.-------காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் : பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கந்தசஷ்டியை முன்னிட்டு பழநி  மலைக்கோயில் அதிகாலை 4:00மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் பால்குடங்கள், காவடிகளுடன் குவிந்தனர். வின்ச், ரோப்கார் காலை 10:00மணி வரை இயக்கப்பட்டது. அதன்பின் வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 1:30மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !