உள்ளூர் செய்திகள்

பலனும் பரிகாரமும்: செவ்வாய் தோஷம் அகல...

சில ஆண்களுக்கு, செவ்வாயின் பாதிப்பால் தாரதோஷம் உண்டாகும். இதைப் போக்க வாழை மரம் வெட்டும் பரிகாரம் செய்ய சொல்வர். மனைவியாக கருதி மரத்தை வெட்டுவதால் தோஷம் நீங்குவதாக ஐதீகம். ஆனால், இது மனதிருப்திக்காக செய்யும் சடங்கு மட்டுமே. 'பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை' என்ற அடிப்படையில், செவ்வாயால் உண்டாகும் தாரதோஷத்திற்கு முருகனை வழிபடுவது நல்லது. ''முன் செய்த பழிக்குத் துணை முருகா எனும் நாமம்'' என வழிகாட்டியுள்ளார் அருணகிரிநாதர். பரிகாரமாக, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். காலை அல்லது மாலையில் 'துதிப்போர்க்கு வல்வினை போம்' என்று துவங்கும் கந்தசஷ்டி கவசத்தை பக்தியுடன் படிக்கலாம். 'கவசம் படித்தால் நவக்கிரகம் மகிழ்ந்து நன்மை அளித்திடும்' என்று கவசம் பாடிய தேவராய சுவாமிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தலமான பழநி முருகனை வழிபடுவது இன்னும் சிறப்பு. ''உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்னும் கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் நேரத்தில் 3 முறை சொல்வதும் நன்மை தரும். 'வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கதிகலங்கிடும்' என்ற உண்மையை உணருங்கள். நல்ல வாழ்க்கைத்துணையை முருகன் தந்தருள்வான் என்று பூரணமாக நம்புங்கள். அவனருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.