எதிரி தொல்லையா...
எப்போது எதிரிகள் பிரச்னை செய்வார்கள்? இதில் இருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்கும் நபர்களுக்கு வரப்பிரசாதியாக இருக்கிறார் காலபைரவர். இவர் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அருள்புரிகிறார். உயிர்களை படைப்பதால் நானே உயர்ந்தவன் என பிரம்மாவும், உயிர்களை காப்பதால் நானே உயர்ந்தவன் என பெருமாளும் ஆணவம் கொண்டனர். சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்ற அவரிடம் பெருமாள் சரணடைந்தார். ஆனால் பிரம்மாவோ அப்போதும், 'சிவனைப் போல் எனக்கும் ஐந்து தலை உள்ளது. நானே பரம்பொருள்' என மார் தட்டினார். இவரது ஆணவத்தை அடக்க பைரவ வடிவில் தோன்றி பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார் சிவன். இந்நாளே காலபைரவாஷ்டமி ஆகும். இதன்பின் தவறை உணர்ந்த பிரம்மா மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் பிரம்மாவின் தலை பைரவரின் கையில் ஒட்டிக் கொண்டதோடு பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டது. இதே கோலத்தில் அலைந்த பைரவர் இறுதியில் நர்மதா நதிக்கரைக்கு சென்றார். அங்கிருந்த முனிவர்களின் அறிவுரைப்படி காசி நகரின் எல்லையை மிதித்த உடன் பைரவரின் கையில் உள்ள தலை கீழே விழுந்தது. அன்று முதல் காசியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். காசி சிவபெருமானின் இருப்பிடமாகவும், கால பைரவர் அந்நகரத்தின் பாதுகாவலராகவும் இருக்கிறார். இதனால் இவர் 'காசியின் கோட்வால்' எனப்படுகிறார். கங்கையின் கரையோரத்தில் உள்ள விஸ்வேஷ்வர் கஞ்ச் பகுதியில் காலபைரவர் கோயில் உள்ளது. விரிந்த கண்களும் பெரிய மீசையுடன் வெள்ளி முகம் கொண்ட கால பைரவரை இங்கு தரிசிக்கலாம். அருகே வாகனமான நாய் உள்ளது. இவருக்கு கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்தால் எதிரித்தொல்லை விலகும். மரணபயம் நீங்கும். மிளகு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். கோயிலின் பின்புறத்தில் சேத்ரபால பைரவர் சன்னதி உள்ளது. எப்படி செல்வது : வாரணாசியில் இருந்து 7 கி.மீ., விசேஷ நாள்: காலபைரவாஷ்டமி, மகாசிவராத்திரி.நேரம்: அதிகாலை 5:00 - 1:30 மணி ;மதியம் 3:30 - 9:00 மணிஅருகிலுள்ள கோயில் : காசி விஸ்வநாதர் 1 கி.மீ., (முக்தி பெற...)நேரம்: அதிகாலை 4:00 -இரவு 11:30 மணிதொடர்புக்கு: 63931 31608