உள்ளூர் செய்திகள்

கார்த்திக் மந்திர்

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் முருகப்பெருமானுக்கு கோயில் உள்ளது. தமிழக பாணியில் அமைந்துள்ள இக்கோயில் கார்த்திக் மந்திர் எனப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு மையமாக இக்கோயில் திகழ்கிறது. சண்டிகர் தமிழ்ச் சங்கத்தினரால் கட்டப்பட்ட கோயில் இது. 'சுவாமிக்கு 'கார்த்திகேயன்' என்னும் திருநாமம் சூட்டுங்கள்; திருப்பணிக்கான பணம் வரும்'' என இங்கு கோயில் கட்டும் முன்பே ஆசியளித்தவர் காஞ்சி மஹாபெரியவர். 1983 முதல் இங்கு முருக பக்தர்கள் வேல் பூஜை நடத்தி வந்தனர். 2002ல் தற்போதுள்ள கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2012ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூரி சங்கராச்சாரியார் இங்கு வருகை தந்துள்ளனர். வள்ளி தெய்வானையுடன் மூலவர் கார்த்திகேயன் நின்ற கோலத்தில் இருக்கிறார். சிவன், பெருமாள், அனுமன் சன்னதிகள் உள்ளன. கோயிலின் 33 துாண்களில் 11 லட்சம் ராம நாமங்கள், அனுமன் சன்னதியில் 1 கோடியே 31 லட்சம் ராம நாமங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாப விமோசன நர்மதேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. நர்மதை ஆற்றில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டவர் என்பதால் இப்பெயரால் அழைக்கின்றனர். பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜை, பிரதோஷ பூஜை நடக்கிறது. எப்படி செல்வது: டில்லியில் இருந்து 240 கி.மீ., சண்டிகர் 31டி செக்டாரில் கோயில் உள்ளது. விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0172 - 261 1191அருகிலுள்ள கோயில் : சண்டிகர் ஜகந்நாத் மந்திர் 1கி.மீ., (நிம்மதிக்கு...)நேரம்: அதிகாலை 5:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 94633 26374