உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பரிகாரம்

பெங்களூரு சிவாஜி நகரில் விசாலாட்சி அம்மனுடன் விஸ்வநாதர் குடிகொண்டிருக்கிறார். கிரக தோஷத்திற்கு பரிகாரமாக இவருக்கு மூன்று பவுர்ணமியன்று அர்ச்சனை செய்கின்றனர். மைசூரு மகாராஜாவிடம் ராய்பகதுார் பட்டம் பெற்றவர் திவான் கோவிந்த செட்டியார். சிவபக்தரான இவர் 1872ல் இக்கோயிலைக் கட்டினார். முன்பு இந்த இடத்தில் வெளியூர் செல்லும் வியாபாரிகள் தங்கும் தர்ம சத்திரம் இருந்தது. காசியில் இருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட சிவலிங்கமே இங்கு கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விசாலாட்சியம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், சுப்பிரமணியர், துர்கை, பைரவர் சன்னதிகள் உள்ளன. காரண ஆகம முறைப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது. தலவிருட்சமான வில்வமரம் கோயிலின் முன்புறத்தில் ஒன்றும், பிரகாரத்தில் ஒன்றுமாக உள்ளன. கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள சண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தியின் சிற்பம் காண்போரை கவர்கிறது. குழந்தைப்பேறுக்காக ஆடிப்பூரத்தன்று முளை கட்டிய பயறு, வாழைப்பழம், வளையல், மஞ்சள், குங்குமத்தை அம்மனின் மடியில் கட்டி பூஜை நடத்துகின்றனர். இதை தம்பதியர் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும். ஆடி மாதப்பிறப்பன்று அம்மனுக்கு 1008 தாமரைகளால் மூலமந்திர சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கும். கார்த்திகை மாத திங்களன்று 108 சங்காபிஷேகம் நடக்கும்.ஆனி அவிட்டத்தன்று நடக்கும் வருடாபிஷேகத்தின் போது சுவாமி, அம்மனுக்கு கனகாபிஷேகம்(தங்க நாணய அபிஷேகம்) நடக்கும். பள்ளியறை பூஜையைத் தரிசிக்க தம்பதி ஒற்றுமை சிறக்கும். ஒரே நாளில் தரிசிக்கும் விதத்தில் அருகிலேயே மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி கோயில்கள் உள்ளன. திங்கள், பவுர்ணமி அன்று மூன்று கோயில்களையும் தரிசிப்பது சிறப்பு. எப்படி செல்வது: ஓசூரில் இருந்து 42 கி.மீ.,பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகிலுள்ள திம்மையா சாலையில் கோயில் உள்ளது.விசேஷ நாள்: சித்ராபவுர்ணமி, ஆனி அவிட்டம் சொர்ணாபிேஷகம், நடராஜர் ஆறுகால அபிேஷகம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்.நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 96325 06092அருகிலுள்ள கோயில்: ஏகாம்பரேஸ்வரர் தர்மராஜா, மீனாட்சி அம்மன் (1 கி.மீ.,)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 080 - 2559 5866