பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் சிந்தாமணிநாதர்
குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டுமா... தென்காசி மாவட்டம் செங்கோட்டை- ராஜபாளையம் சாலையில் உள்ள வாசுதேவநல்லுார் சிந்தாமணிநாதர் கோயிலுக்கு வாருங்கள். மகிழ்ச்சியாக செல்லுங்கள்.சிவபெருமான் கோயில்கள் அனைத்திலும் மூலவராக இருப்பது சிவலிங்கம். ஆனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூலவராக அர்த்தநாரீஸ்வரர் (சிவசக்தி இணைந்த வடிவம்) அருள் செய்கிறார். அதுபோல வாசுதேவநல்லுார் கோயிலில் அம்மையப்பர் இணைந்த வடிவத்துடன் சிந்தாமணிநாதர் என்ற திருநாமத்தில் சிவபெருமான் அருள் பாலிக்கிறார்.துர்வாச முனிவரிடம் சாபம் பெற்ற வாசவன் என்ற பெயருடைய இந்திரன் இவரை வழிபட்டு நற்கதி பெற்றான். அதன் காரணமாக வசவனுார் என்ற ஊர் பெயரே வாசுதேவநல்லுாராக மாறியது. இப்பகுதியை ஆண்ட சேரமன்னர் ரவிவர்மனின் மகனான குலசேகரன் தொழுநோயால் அவதிப்பட்டார். அமைச்சர்களின் ஆலோசனைப்படி இங்கு வந்து வழிபட நோய் நீங்கியது. அவரே இக்கோயிலை உருவாக்கினார். பின்னாளில் பாண்டிய மன்னர்கள் பலர் திருப்பணி செய்துள்ளனர். இங்கு ஓடும் கருப்பாநதி அருகே இருந்த புளியமரங்கள் நிறைந்த வனத்தில் தவம் இருந்த திருமால் முதலான தேவாதி தேவர்களுக்கு அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சிவபெருமான் தரிசனம் கொடுத்தார். ஆதலால் 'சிந்தாமணிநாதர்' என பெயர் பெற்றார். ஆனியில் நடைபெறும் பிரமோற்ஸவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஐப்பசி பவுர்ணமியில் நடைபெற வேண்டிய அன்னாபிஷேகம் சித்திரை மாதப் பிறப்பன்று நடைபெறும். கார்த்திகை மாதம் சோமவார தினத்தில் இவரை தரிசனம் செய்தால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவர் என்பது சிறப்பு. விநாயகர், முருகர், நடராஜர், அறுபத்துமூவர், சண்டிகேஸ்வரர், சூரியன், தெட்சிணாமூர்த்தி, ஜூரதேவர், சப்தமாதர், வீரபத்திரர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, சாஸ்தா, சனீஸ்வரர், நாகராஜா, நாகராணி, வாகனம் இல்லாத பைரவர் சன்னதிகள் உள்ளன.எப்படி செல்வது: வாசுதேவநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ.,விசேஷ நாள்: ஆனி பிரமோற்ஸவம் ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை மாத திங்கட்கிழமை, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரிநேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 95435 63100அருகிலுள்ள தலம்: புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் 10 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 04636 - 235 077