தீவனூர் லிங்கவடிவ பிள்ளையார்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி விநாயகர் கோயில். ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இவற்றிற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.