உள்ளூர் செய்திகள்

உனக்கு எது சரியானதோ அதை மட்டுமே செய்!

* மனதை ஒருமுகப்படுத்தப் பழகியவர்கள் எந்தச் செயலையும் எளிதாகச் செய்து விடமுடியும்.* நன்மையும், தீமையும் நமக்கு அடிமைகள். ஆனால், நாம் அதற்கு அடிமைகளாக இருக்கக் கூடாது.* நீங்கள் மற்றவர்கள் குற்றத்தைக் காண முயலாதீர்கள். உங்கள் குற்றத்தைக் கண்டு திருத்திக் கொள்ளுங்கள்.* நியாயத்தைச் சொல்வதில் எப்போதும் கோழையாய் இருக்காதீர்கள். வீட்டிற்குள் பயந்து பதுங்கிக் கிடக்காதீர்கள். உலகத்தின் நன்மைக்காகச் சண்டை செய்வதில் சூரனாயிருங்கள்.* ஒருவனுக்குத் துன்பம் விளைவித்துவிட்டு நம்மால் சுகமாயிருந்து விடமுடியாது. * சிறிதளவு அகங்காரம் இருந்தாலும் நமது மனதில் சத்தியம் ஒருபோதும் தோன்றாது.* அன்புள்ளவன் எதையும் விரும்பமாட்டான். எதற்கும், யாருக்கும் பயப்படமாட்டான்.* ஒவ்வொருவனும் எஜமானனாக இருப்பதென்பது எளிது. ஆனால், நல்ல வேலைக்காரனாக இருப்பது கடினம்.* ஒரு விஷயத்தில் உண்மை இருக்குமானால் உலகில் ஒருவராலும் போற்றப்படாமல் இருப்பதில்லை. நிச்சயம், அதன் உண்மைத்தன்மையை உலகம் ஒருநாள் அறிந்து கொள்ளும். * சத்தியத்தையும், அன்பையும், நேர்மையையும் உலகில் எந்த சக்தியாலும் எதிர்க்க முடியாது.* பெரிய செயல்களைச் செய்ய வேண்டுமானால் கொள்கைகளும் பெரிதாக இருக்கவேண்டும்.* எல்லாவற்றையும், எல்லார் சொல்வதையும் செவி கொடுத்துக் கேளுங்கள். ஆனால், உனக்கு எது சரியானதாகவும், நல்லதாகவும் தோன்றுகிறதோ அதை உறுதியோடு செயல்படுத்து.* வாழ்வில் மற்றவர்களை எதிர்பார்த்தே நடக்கப் பழகியவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல. தெய்வபக்தியே மேலான சக்தி.* பெரிய உழைப்பினை விலையாகக் கொடுக்காமல் அரியசெயல்கள் நிறைவேறுவதில்லை.* யார் ஒருவர் தன்னைச் சரிப்படுத்திக் கொள்கிறாரோ அவர் உலகைச் சரிப்படுத்தியவர் ஆவார்.* அதிக கல்வி கற்பதனால் மட்டுமே உண்மை மனிதர்களை நம்மால் உருவாக்கிவிட முடியாது. * அன்பாக பேசுபவன் யாரிடமும் எதையும் கேட்டு நிர்ப்பந்தம் செய்யமாட்டான். கோபக்காரனுக்கோ நியாயம், அநியாயம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.* உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் மதிப்பு தானாகவே வந்துவிடும். * தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் ஒரு செயல் வெற்றி பெறுவதற்கு அடிப்படை.* காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்துடன் சோம்பலை மறந்து சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். உறுதிபடச் சொல்கிறார் விவேகானந்தர்