உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் காசி ராமேஸ்வர யாத்திரை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலுக்குச் சென்றால் புனித தலங்களான காசி, ராமேஸ்வரத்தை ஒருசேர தரிசித்த பலன் கிடைக்கும். தலவரலாறு: பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. 'குலோத்துங்க சோழீஸ்வரம்' என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் 'சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்' என மாறியது. இப்போது 'சாந்தநாத சுவாமி' என வழங்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை 'வேதநாயகி' என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு. காரண ஆகம முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது. காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்- பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணிய பலன் கிடைக்கும். ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரக தோஷம் நீங்கும். அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் 'காட்சி கொடுத்த நாயனார்' என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சரபேஸ்வரர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.தென்கரை ஆஞ்சநேயர்: கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். எப்படி செல்வது: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., விசேஷ நாட்கள்: ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம்நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 08:30 மணிதொடர்புக்கு: 99420 75863அருகிலுள்ள தலம்: புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயில்