உள்ளத்தை மட்டும் பாருங்கள்! உலகமே உங்களை பார்க்கும்!
ஆக.3 - நினைவு தினம்* உன் உள்ளத்தைக் கட்டுப்படுத்து. வெற்றிக்கான கதவு திறக்கும். உலகமே உன்னை பாராட்டும்.* அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் மனம் துாய்மையாகும். மாறாத அன்பினால் நாம் உலகையே வெற்றி கொள்ள முடியும்.* தளர்ச்சி, சோர்வை நீக்கி, தடைபட்ட செயல்களை துரிதப்படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே உண்டு.* மனிதன் முழுமையான வளர்ச்சியடைய உதவுவது தியானம். இதனை தினமும் கடைபிடிப்பது நல்லது.* தானியம், பழங்கள், காய்கறிகளை வழங்கி நம்மை வாழச் செய்யும் பூமித்தாயான மண்ணும், நீரும் நம் வழிபாட்டுக்கு உரியவை. * கடவுளைப் பற்றி விளக்குவது என்பது முடியாதது.* மனமாகிய வீட்டில் இருந்து கடவுள் நம்மை இயக்குகிறார். அவர் நம் கண்ணுக்குத் தெரிய மாட்டார். ஆனால், அவர் அருளால் தான் நம் வாழ்க்கை நடக்கிறது.* வாழ்வின் ஒரே உயர்ந்த குறிக்கோளான பக்தியில் முழுமூச்சாக ஈடுபடுங்கள். * மனிதனின் கவுரவம் என்பது புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி வாழ்வதில் தான் இருக்கிறது.* அந்தரங்க விஷயங்களை ஒருவர் கையாளும் விதத்தைப் பொறுத்தே, அவரது வாழ்க்கையில் வெற்றியும், சந்தோஷமும் நிர்ணயிக்கப்படுகிறது.* அறிவு, உணர்ச்சி, குணம் இவற்றால் நாம் வேறுபடுவதால் தான் சமுதாயத்தில் பிரிவுகள், பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன. * நாம் யார், எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை அறியும் போது நம் மனக் குழப்பம், குறைபாடு, ஏக்கம் அனைத்தும் தீர்ந்து தெய்வீகநிலைக்கு உயர்கிறோம்.* உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, துணிவைப் பாராட்டிக் கடவுள் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.* பிறரின் மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பமும், பிறருடைய துன்பத்தில் உண்மையாக பங்கும் கொள்ள வேண்டும்.* சுயநலமின்றி உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அரவணைக்க முயலுங்கள். நீங்களும் உயர்ந்தவர்களாகி விடுவீர்கள்.* உடலுக்குள் உள்ள உறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் இயக்கத்தை உணர்கிறோம். இருதயம் ரத்தத்தை ஓட வைக்கிறது. குடல் உணவை ஜீரணம் செய்கிறது. இதைப் போல இறைவனும் நம்முள் இருந்து நம்மை இயக்குகிறான்.* உடல் துன்பத்தை பெரிதுபடுத்தாதீர்கள். வாழ்வில் உயர விரும்பினால் இதை நாம் பின்பற்றுவது அவசியம்.* தத்துவத்தை அடிப்படையாக கொண்டது வேதம். இதை எளிமையாக பாமரனுக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை புராணங்கள்.* கடவுள் மனித புத்திக்கு எட்டாதவர். பெரிய ஆஸ்திகனாக இருந்தாலும் அவர் அகப்படமாட்டார். சீர்படுத்துகிறார் சின்மயானந்தர்