செவ்வாய் தோஷம் போக்கும் முருகன்
வாய் மணக்கும் திருப்புகழ் பாடல்கள், உருவாகக் காரணமான தலம் திருச்சி அருகே உள்ள வயலுார். இங்குள்ள முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும். சோழ மன்னர் ஒருவர் ஒரே கணுவில் மூன்று கரும்புகள் இருப்பதைக் கண்டு, பூமியைத் தோண்ட அங்கே சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டார். கோயில் எழுப்பி சுவாமிக்கு ஆதிநாதர், அம்மனுக்கு ஆதிநாயகி என்று பெயர் சூட்டினார். வயல்கள் நிறைந்த ஊர் என்பதால் இதற்கு 'வயலுார்' என பெயர் வந்தது. ஒருமுறை அருணகிரிநாதருக்கு, 'வயலுாருக்கு வா!' என அசரீரி கேட்டது. அதை ஏற்று இங்கு வந்த போது முருகன் காட்சி தரவில்லை. ஏமாற்றம் அடைந்ததால் 'அசரீரி பொய்யோ?' என கத்தினார். காட்சியளித்த முருகன் அருணகிரிநாதரின் நாக்கில் 'ஓம்' என எழுதி அருள்புரிந்தார். இத்தலத்தில் தங்கி 18 திருப்புகழ் பாடல்களைப் பாடினார் அருணகிரிநாதர். ஒரு முறை வாரியார் இங்கு வந்த போது அர்ச்சகருக்கு ஐம்பது காசு காணிக்கை தந்தார். அன்றிரவு கோயில் நிர்வாகியின் கனவில், 'என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயே? அதைக் கொண்டு உன்னால் கோபுரம் கட்ட முடியுமா?' என கோபித்தார் முருகன். கோயிலில் விசாரித்த நிர்வாகிக்கு முதல்நாள் வாரியார் வந்ததும், ஐம்பது காசு காணிக்கை அளித்த விபரமும் தெரிய வந்தது. நிர்வாகி அதை மணியார்டராக வாரியாருக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னர் வாரியார் இத்தலத்திற்கு முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஆதிநாதர் சன்னதிக்குப் பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். கந்தசஷ்டியன்று முருகன்- தெய்வானை, பங்குனி உத்திரத்தன்று முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது.இரண்டு காலையும் தரையில் ஊன்றி நிற்கும் நடராஜர், அருணகிரிநாதருக்கு காட்சியளித்த 'பொய்யா கணபதி' சன்னதியும் இங்குள்ளது.எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 11 கி.மீ., விசஷே நாட்கள்: வைகாசி பிரம்மோற்ஸவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் நேரம்: காலை 6:00 - 1:00 மணி, பகல் 3.30 - 9:00 மணிதொடர்புக்கு: 0431 - 260 7344, 98949 84960அருகிலுள்ள தலம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 15 கி.மீ.,