உள்ளூர் செய்திகள்

உலகத்தாயையே பாதுகாப்பவள்

உலகத்திற்கே தாயாக விளங்குபவள் காஞ்சி காமாட்சி. அந்த தாயையே பாதுகாக்கும் தலைமைத் தெய்வமாக விளங்குபவள் அரசுகாத்த அம்மன். சக்தி மிக்க இந்த தேவியை வணங்கி வருவோமா!தலவரலாறு:பார்வதிதேவி காஞ்சியில் தவம் செய்தபோது அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தைவெளியம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றவள் அரசுகாத்த அம்மன். சோழமன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு'காத்த அம்மன் என்று பெயர் வந்ததாக கூறுவர். வலதுகாதில் குண்டலம், இடதுகாதில் தோடு அணிந்து இருப்பாள். இவள் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இருகோரைப்பற்களும், நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ்க்கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடதுகாலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் ஒரு நகரைப் பாதுகாப்பவர்களாக, காவல் தெய்வங்களாக விளங்குவார்கள். சம்பத்கரீஸ்வரி: அரசுகாத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் 'செல்வம்'. 'கரி' என்றால் 'யானை'. யானைமீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்மவாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது. இவளுக்கு பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி,ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் உலா நடக்கும். சிறப்பம்சம்:இங்கு சம்பத்விநாயகர், வள்ளிதெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், ஐயப்பன் சந்நிதிகள் உள்ளன. அம்மனின் எதிரில், துதிக்கையால் ஒருவனை வதம் செய்யும் நிலையில் யானை சிற்பம் உள்ளது. தோல்வியாதி, வாதம், வாய் பேச இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு நிவாரணம் வேண்டுகிறார்கள். திருவிழா:சித்ராபவுர்ணமி, நவராத்திரி, ஆடி,தை வெள்ளிதிறக்கும்நேரம்:காலை 6-பகல் 12, மாலை4- இரவு 8.30.இருப்பிடம்:காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., போன்:94449 34623, 044 2722 6343.- சி.வெங்கடேஸ்வரன்