உள்ளூர் செய்திகள்

உருவதத்தைக் காட்டிடும் கண்ணாடி .... உலகத்தை வைத்தது நம் முன்னாடி ! - ஸ்ரீஅன்னையின் தங்கமொழி

* மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவாழ்வைப் பெற முயற்சிக்க வேண்டும். இப்படிச் சொல்வது சுலபம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இந்தக் கடினத்தைச் சுலபமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.* இறைவனின் தொண்டனாக இருந்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு பணியையும் இறைவனுக்கே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். படைத்தவன் இருக்கிறான் என்ற தைரியத்துடன், நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டும்.* 'கடவுளே! நீ மட்டும் தான் எனக்கு வேண்டும்' என்று தெய்வத்திடம் உறுதிப்பாட்டுடன் சொன்னால், நீங்கள் எப்போதுமே நேர்மையாக இருப்பதற்கான சூழ்நிலை அமையும்.* மனம் ஒரு 'பாலிஷ்' செய்த நிலைக்கண்ணாடி. அதுவே உலகில் வசிக்கும் பிறரிடம் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்குள் பிரதிபலிக்கிறது. அதன் மீது தூசு படியாமல் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது தொடர்ச்சியான பணியாகும்.* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம்.  சத்தியத்தையும் உண்மை யையும் கடைப்பிடிப்பவனிடமே கடவுள் அருள் பரிபூரணமாய் இருக்கும்.* வாழ்க்கையில் எது நடந்தாலும், எந்த முட்டுக்கட்டை தடுத்தாலும் இறைசிந்தனையை விடாது மேற்கொண்டவர்களுக்கு இறையருள் கிடைப்பது உறுதியாகும்.* புறக்கணிக்கப்பட வேண்டிய மூன்று குணங்கள் ஒத்துழையாமை, கண் மூடித்தனம், இயலாமை ஆகியவை. வாழ்வின் சங்கடமான கட்டத்தில் விட்டுக்கொடுக்கும் குணமே, மனிதனைப் பாதுகாக்கப் போதுமானதாகும். * தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் பிரார்த்தனை செய்து தாங்கள் கேட்டதை இறைவனிடம் இருந்து தவறாமல் பெற்று விடுகின்றனர். நேர்மையுடன் இருப்பதும், தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் மேலும் நேர்மையை வளர்த்துக் கொண்டிருப்பதுமே நிறைவான தூய்மையாகும்.* வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். அல்லது உண்மைக்காக வாழ்தல் குறைந்தபட்சம் தனது ஆன்மாவுக்காக வாழ்தலாகும்.* நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும்போதும், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும், அனைத்து செயல்களும் அழகாகவும் மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் மாறிவிடுகிறது.* தியானத்தின் மூலம் ஒருவன் ஒருபங்கு தான் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகத் தன் பணிகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்பவன் வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம் காண்பான்.* இறைவனின் சொற்கள் ஆறுதலையும், பேரின்பத்தையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக் கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கின்ற திரையை விலக்குகின்றன.* நாம் அனைவரும் முற்பிறவியில் சந்தித்திருக்கிறோம். இல்லாவிட்டால் நாம் இப்பிறவியில் ஒன்று சேர்ந்திருக்கமாட்டோம். நாம் ஒரு தாயின் மக்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இறைவனோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றுகிறோம். * மனித விவகாரங்களைப் பொறுத்தவரை, நல்லவரோடு மட்டுமல்லாது தீயவரோடும் பழகுவதை தவிர்க்க முடியாது. தீயவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு வாயப்பிருக்கலாம். அதனால், நம் நட்புறவு இறைவனோடு மட்டும் இருக்கட்டும். இறைவனைப் பொறுத்தவரை எதிலும் ஏமாற்றத்துக்கு இடம் இல்லை.