ஹயக்ரீவரை வணங்குங்க! பரிட்சையில் வெல்லுங்க!
கல்வி தெய்வமான ஹயக்ரீவர், செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோயிலில், யோகநிலையில் காட்சி தருகிறார். இவரை மாணவர்கள் தரிசித்தால், நினைவாற்றல் அதிகரித்து, நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும். தல வரலாறு: பிரளய காலத்தில், எல்லா உயிர்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தார் மகாவிஷ்ணு. மீண்டும் புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக் கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தார். பிரம்மனும், வேதங்களின் உதவியுடன் படைப்புத்தொழிலைத் தொடங்கினார். இதன்பின், மது, கைடபர் என்னும் அசுரர்கள் விஷ்ணுவின் மேனியில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து உற்பத்தியாயினர். பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனர். தங்களுக்கும் படைப்புத் தொழில் செய்யும் உரிமை உண்டு என வாதிட்டனர். பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனர். பிரம்மன் விஷ்ணுவைச் சரணடைந்தார். விஷ்ணு, குதிரை முகம் கொண்டு அசுரர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டார். அசுரர் கைபட்ட தங்களை புனிதமாக்கும்படி வேதங்கள் வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சி முகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் அவை புனிதமடைந்தன. இதனால் தான் காலை வேளையில், குதிரையை பார்ப்பது நல்லது என்பார்கள்.கோயில் அமைந்த விதம்: 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு, 1848ல், கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்திலிருந்து ஹயக்ரீவர் சிலையை எடுத்து வந்தனர். அந்த சிலையை வைகாசி மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர், தாயார் ஹேமாம்புஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. மூலவர் வரதராஜர், உற்ஸவர் தேவநாத சுவாமி என அழைக்கப்படுகின்றனர். கல்விக்கு சிறப்பு பூஜை: யோக ஹயக்ரீவர், சங்கு, சக்கரம் ஏந்தி, யோகநிலையில் சேவை சாதிக்கிறார். இங்கு வித்யாதோஷ நிவர்த்தி சங்கல்ப ஆராதனை என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் பேனா, பென்சில், ஹால் டிக்கட் ஆகியவற்றை பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து வழிபட, ஞாபகசக்தி அதிகரிக்கும். 10,12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் இந்த வழிபாட்டை அதிகமாக செய்கின்றனர். மாணவர்கள் சார்பில், அவர்களது பெற்றோரும் வந்து பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை செய்யலாம். நேரில் வர முடியாத பக்தர்களுக்காக, பூஜையில் வைக்கப்பட்ட ஹயக்ரீவர் படம், பேனாவை தபாலில் அனுப்பப்படுகிறது. திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் பேசும்திறன் உண்டாகும். அர்ச்சகரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு செல்வது நல்லது.இருப்பிடம்: சென்னை - செங்கல்பட்டு ரோட்டில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 3 கி.மீ.,திறக்கும் நேரம்: காலை 7.30 - 12.00, மாலை 4.30 - இரவு 8.00. போன்: 86751 27999.