திருப்பரங்குன்றத்தில் கங்கை
சிவபூஜையின் போது தவறு செய்வோரை சிறை பிடிப்பது கற்கிமுனி என்ற பூதத்தின் வழக்கம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை விழுங்குவது அதன் நோக்கம். ஒருவழியாக 999 முனிவர்கள் அகப்பட்டனர். இன்னும் ஒருவரைப் பிடிக்க பூதம் காத்திருந்தது. இந்த சமயத்தில் திருப்பரங்குன்றம் வந்தார் நக்கீரர். சரவணப் பொய்கையில் நீராடி ஒரு ஆலமரத்தடியில் பூஜை செய்தார். அந்த மரத்தின் இலை காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறும் தன்மை கொண்டது. நக்கீரர் பூஜை செய்த போது ஆலிலை ஒன்று நீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இதைக் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என பூதம் அவரை பிடித்து சிறை வைத்தது. அங்கிருந்த 999 முனிவர்களும், “நக்கீரரே... ஒருவர் குறைவாக இருந்ததால் நாங்கள் உயிருடன் இருந்தோம். இப்போது ஆயிரம் ஆனதால் பூதத்துக்கு இரையாகப் போகிறோம்” என வருந்தினர். உடனே முருகன் மீது நக்கீரர் 'திருமுருகாற்றுப்படை' பாடினார். பூதத்தைக் கொன்று முனிவர்களைக் காப்பாற்றினார் முருகன். பூதம் தன்னைத் தீண்டிய பாவம் தீர நக்கீரர் கங்கையில் நீராட விரும்பினார். வேலால் பாறையைக் கீறி கங்கையை முருகன் வரவழைத்தார். பாவம் விலக நீராடிய நக்கீரர் முருகனை வணங்கினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இத்தீர்த்தம் உள்ளது.